கிரிக்கெட் (Cricket)

ரஞ்சி கோப்பை: காலிறுதியில் விதர்பாவிடம் வீழ்ந்தது தமிழ்நாடு

Published On 2025-02-11 17:58 IST   |   Update On 2025-02-11 17:58:00 IST
  • தமிழ்நாடு அணிக்கு 401 ரன்கள் இலக்காக விதர்பா அணி நிர்ணயித்தது.
  • 2-வது இன்னிங்சில் தமிழ்நாடு அணி 202 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

நாக்பூர்:

90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் காலிறுதி ஆட்டங்கள் தற்போது நடந்து வருகிறது. நாக்பூரில் தொடங்கியுள்ள ஆட்டத்தில் தமிழ்நாடு- விதர்பா அணிகள் மோதின. இதில் முதல் இன்னிங்சில் விதர்பா 353 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து தடுமாறியது.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய தமிழக அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 7 ரன்னிலும், அடுத்து வந்த முகமது ஒரு ரன்னிலும், பிரதோஷ் ரஞ்சன் பால் 48 ரன்னிலும், சோனு யாதவ் 32 ரன்னிலும் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்ந்தனர். முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவர்களில் 225 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. விதர்பா தரப்பில் ஆதித்ய தாக்ரே 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 128 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 5 விக்கெட்டுக்கு 169 ரன்கள் அடித்து 297 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. யாஷ் ரத்தோட் 55 ரன்னுடனும், ஹர்ஷ் துபே 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தமிழக அணி தரப்பில் சாய்கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த விதர்பா 272 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தமிழகம் வெற்றி பெற 401 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 112 ரன்களும், ஹர்ஷ் துபே 64 ரன்களும் குவித்தனர். தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 401 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழக அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் தமிழக அணி 61.1 ஓவர்களில் 202 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் விதர்பா அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

Tags:    

Similar News