விளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக்: டேபிள் டென்னிசில் காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா

Published On 2024-08-05 11:03 GMT   |   Update On 2024-08-05 11:03 GMT
  • இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி 3-1 என வென்றது.
  • ஒற்றையர் பிரிவின் 2 சுற்றிலும் மணிகா பத்ரா வென்றார்.

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

இந்நிலையில், டேபிள் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய ஜோடி ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா கிரிஷ் காமத், ருமேனிய ஜோடியுடன் மோதியது.

இதில் இந்திய ஜோடி 11-9, 12-10, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது.

2வது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா 3-0 என வென்றார். இதன்மூலம் 2-0 என இந்தியா முன்னிலை பெற்றது.

3வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா 2-3 என தோல்வி அடைந்தார். இதன்மூலம் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.

4வது சுற்றில் இந்தியாவின் அர்ச்சனா காமத் 1-3 என தோல்வி அடைந்தார். இதன்மூலம் இரு அணிகளும் 2-2 என சமனிலை வகித்தன.

இறுதியில் வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது சுற்று நடந்தது. இதில் இந்தியாவின் மணிகா பத்ரா அபார வெற்றி பெற்றார். இதையடுத்து இந்தியா ருமேனியாவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.

Tags:    

Similar News