விளையாட்டு

பாரா ஒலிம்பிக் போட்டி: ஈட்டி எறிதல்- உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு

Published On 2024-09-06 06:12 GMT   |   Update On 2024-09-06 06:12 GMT
  • இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களுடன் 16-வது இடத்தில் உள்ளது.
  • பாரா ஒலிம்பிக் தடகளத்தில் இன்று மதியம் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்54 பிரிவு இறுதிப் போட்டி நடக்கிறது.

பாரீஸ்:

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் (12 விளையாட்டு) கலந்து கொண்டனர். 8-வது நாளான நேற்று வரை இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களுடன் 16-வது இடத்தில் உள்ளது.

9-வது நாளான இன்று இந்தியாவுக்கு மேலும் பதக்கங்கள் கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரா ஒலிம்பிக் தடகளத்தில் இன்று மதியம் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்54 பிரிவு இறுதிப் போட்டி நடக்கிறது. இதில் இந்திய வீரர் திபேஷ்குமார் பங்கேற்கிறார்.

பெண்களுக்கான ஈட்டி எறிதல் எப்46 பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் பாவனாபென் அஜபாஜி சவுத்ரி களம் காணுகிறார்.

ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் எப்64 பிரிவில் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் பிரவீண்குமார் பங்கேற்கிறார்.

ஆண்களுக்கான குண்டு எறிதல் எப்57 பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சோம் ராணா, ஹோகாடோ செமா களம் காணுகிறார்கள்.

ஆண்களுக்கான 400 மீட்டர் (எப்47 பிரிவு) ஓட்டத்தில் திலீப் காவித், பெண்களுக்கான 200 மீட்டர் (எப்12) ஓட்டத்தில் சிம்ரன் சர்மா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

பெண்களுக்கான வலுதூக்குதல் 67 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் கஸ்தூரி ராஜாமணி பங்கேற்கிறார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இப்போட்டி இரவு 8.30 மணிக்கு நடக்கிறது.

கேனோயிங் போட்டியில் இந்திய வீரர் யாஷ்குமார், இந்திய வீராங்கனைகள் பிராச்சி யாதவ், பூஜா ஒஜா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இன்று ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வலுதூக்குதல் போட்டிகளில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News