வினேஷ் போகத்திற்கு நிச்சயமாக வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட வேண்டும்- சச்சின் ஆதரவு
- சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வினேஷ் போகத் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
- வினேஷ் போகத் நிச்சயமாக வெள்ளிப் பதக்கத்திற்கு தகுதியானவர்.
ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப்போட்டி இன்று இரவு நடைபெறவுள்ள நிலையில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.
ஆனால், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதைதொடர்ந்து, இறுதிப்போட்டி வரை முன்னேறியதால் வெள்ளி பதக்கம் வழங்க வேண்டும் னெ சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வினேஷ் போகத் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் இன்று தீர்ப்பளிக்கிறது.
இந்நிலையில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத்திற்கு நிச்சயமாக வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட வேண்டும் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்பே எடையின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு விளையாட்டுக்கும் விதிகள் உள்ளன. அந்த விதிகள் சூழலில் வைத்து பார்க்கப்பட வேண்டும். சில சமயங்களில் மறுபரிசீலனை செய்யப்படலாம்.
செயல்திறனை மேம்படுத்தும் மருந்துகளின் பயன்பாடு போன்ற நெறிமுறை மீறல்களுக்காக ஒரு தடகள வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அது புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.
அப்படியானால், எந்தப் பதக்கமும் வழங்கப்படாமல், கடைசி இடத்தைப் பிடித்திருப்பது நியாயமானதாகவே இருக்கும்.
வினேஷ் தனது எதிரிகளை நியாயமான முறையில் தோற்கடித்து முதல் இரண்டு இடங்களை எட்டினார். அவர் நிச்சயமாக வெள்ளிப் பதக்கத்திற்கு தகுதியானவர்.
விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்காக நாம் அனைவரும் காத்திருக்கிறோம். வினேஷ்க்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புவோம், பிரார்த்தனை செய்வோம்
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.