விளையாட்டு
null

சரியான விஷயத்திற்காக எப்போதும் போராடுவேன் - வினேஷ் போகத்

Published On 2024-08-17 01:53 GMT   |   Update On 2024-08-17 08:33 GMT
  • வெள்ளிப் பதக்கம் கோரி வினேஷ் அளித்த மனுவை விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  • எனக்குள் சண்டையும் என்னுள் மல்யுத்தமும் எப்போதும் உயிருடன்தான் இருக்கும்.

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் பெண்கள் மல்யுத்த இறுதிப்போட்டியில் [50 கிலோ எடைப் பிரிவு] இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

எடை அதிகரித்ததால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று இந்திய ஒலிம்பிக் சமேளனமும் கைவிரித்துவிட்டது. வெள்ளிப் பதக்கம் கேட்டு வினேஷ் அளித்த மனுவையும் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் ஆகஸ்ட் 14 அன்று தள்ளுபடி செய்தது.

மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து நாடு திரும்பியுள்ளார். வினேஸ் போகத்துக்கு இந்திய விளையாட்டு ஆளுமைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஸ்விஸ் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்வதே பதக்கம் பெறுவதற்காக அடுத்து உள்ள ஒரே வழி என்று இந்திய ஒலிம்பிக் சங்க வக்கீல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வினேஷ் போகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கைகளால் கண்களை மூடிக்கொண்டு கீழே படுத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தின் போது, இந்திய பெண்கள் மற்றும் தேசிய கொடியின் புனிதத்தை பாதுகாக்க கடுமையாக போராடினேன். ஆனால் கடந்த ஆண்டு மே 28 அன்று முதல் தேசியக் கொடியுடன் நான் இருக்கும் புகைப்படங்களை பார்க்கும்போது அது என்னை அச்சுறுத்துகிறது.

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியக் கொடியை உயரே பறக்க வைக்க வேண்டும் என்பதும், அதன் மதிப்பை பிரதிபலிக்கும் வகையில் தேசிய கொடியினை வைத்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதும் எனது விருப்பமாக இருந்தது. அப்படி செய்வது, மல்யுத்தத்துக்கு நடந்தவற்றையும், தேசிய கொடிக்கு நடந்தவற்றையும் கண்டிக்கும் விதமாக இருக்கும் என்று நினைத்தேன்.

சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் அவற்றை சொல்ல வார்த்தைகள் ஒருபோதும் போதுமானதாக இருக்காது. நேரம் கிடைக்கும்போது நான் மீண்டும் பேசுவேன்.

ஆகஸ்ட் 6-ந் தேதி இரவும், ஆகஸ்ட் 7ம் தேதி காலையும் நடந்தது குறித்து நான் சொல்ல விரும்பவதெல்லாம் இதுதான். நாங்கள் பின்வாங்கவில்லை. எங்கள் முயற்சிகள் ஒருபோதும் நிற்கவில்லை. நாங்கள் சரணடையவில்லை. ஆனால் கடிகாரம் நின்று விட்டது, காலம் கைகொடுக்க வில்லை. என்னுடைய விதியும் அப்படிதான் இருந்தது.

என்னுடைய அணிக்கும், சக இந்தியர்களுக்கும், குடும்பத்துக்கும் சாதிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த ஒன்று, நிறைவடையாமல் போய் விட்டதாக உணர்கிறேன். ஒருவேளை சூழல்கள் வேறாக இருந்திருந்தால் 2032 வரைக்கும் நான் விளையாடியிருக்கக் கூடும். ஏனென்றால் எனக்குள் இருக்கும் போராட்டமும், மல்யுத்தமும் எப்போதும் அப்படியேதான் இருக்கும்.

எதிர்காலம் எனக்காக என்ன வைத்திருக்கிறது என்பதை என்னால் கணிக்க இயலாது. ஆனால் நான் நம்பும் விஷயத்துக்காக, சரியானவற்றுக்காக நான் தொடர்ந்து எப்போதும் போராடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News