தமிழ்நாடு (Tamil Nadu)

ஊட்டி தாவரவியல் பூங்காவில் தொடங்கிய மலர் கண்காட்சி-ஒரே நாளில் 14 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்

Published On 2024-05-11 05:49 GMT   |   Update On 2024-05-11 05:49 GMT
  • கோடைவிழா நேற்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சியுடன் தொடங்கியது.
  • ரோஜா பூங்காவில் பல வண்ண மலர்களை கொண்டு யானை, புலி, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகளின் உருவங்களும் வைக்கபட்டிருந்தன.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளு, குளு காலநிலையை அனுபவிப்பதற்காக தினமும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இங்கு வந்த வண்ணம் இருப்பர்.

குறிப்பாக கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான கோடைவிழா நேற்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சியுடன் தொடங்கியது.

மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 2 லட்சம் மலர்களை கொண்டு மலைரெயில், டிஸ்னி வேல்டு, பல்வேறு அலங்கார வளைவுகள், மலர் அலங்காரங்களும் வடிவமைத்து வைக்கப்பட்டிருந்தன.

இதேபோல் ரோஜா பூங்காவிலும் ரோஜா கண்காட்சி நேற்று தொடங்கியது. ரோஜா பூங்காவில் பல வண்ண மலர்களை கொண்டு யானை, புலி, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகளின் உருவங்களும் வைக்கபட்டிருந்தன.

கண்காட்சி தொடங்கியதையொட்டி அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர். நேற்று ஊட்டியில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் ஊட்டி தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சியை பார்வையிட்டனர்.

அங்கு வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்கள், மலர் மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளையும் கண்டு ரசித்தனர். மலைரெயில், டிஸ்னி வேல்டு ஆகியவற்றையும் பார்வையிட்டு, அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.


இதேபோல் ரோஜா பூங்காவில் வைக்கப்பட்டிருந்த குட்டியுடன் கூடிய யானை, மான், புலி உள்ளிட்ட வனவிலங்குகளின் உருவங்களையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தைகள், யானை, புலி உள்ளிட்டவற்றை பார்த்ததும் ஆனந்தத்தில் துள்ளி குதித்து, அதன் அருகே சென்று, அதனை தொட்டு பார்த்து ரசித்ததுடன், புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

நேற்று ஒரே நாளில் நீலகிரிக்கு 24, 247 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்த மலர் கண்காட்சியை 14 ஆயிரத்து 80 பேர் பார்வையிட்டுள்ளனர். ஊட்டி ரோஜா பூங்காவில் நடந்த மலர் கண்காட்சியை 6 ஆயிரத்து 209 பேர் பார்வையிட்டுள்ளனர்.

இதேபோல் குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 2,471 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 723 பேரும், தேயிலை பூங்காவுக்கு 675 பேரும், மரவியல் பூங்காவுக்கு 89 பேரும் வருகை தந்துள்ளனர்.

Tags:    

Similar News