தமிழ்நாடு
ஜல்லிக்கட்டில் 2 பேர் உயிரிழப்பு- நிதியுதவி வழங்க உத்தரவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
- 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ், காளை முட்டியதில் உயிரிழந்தார்.
- இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது, 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ், காளை முட்டியதில் உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த புதுக்கோட்டையை சேர்ந்த அரவிந்த் என்ற வாலிபர் காளை முட்டியதில் உயிரிழந்தார்.
காளை முட்டி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு குடும்பங்களுக்கும் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.