தமிழ்நாடு

மாணவியின் வீடு புகுந்து தாக்கியவர்களை கைது செய்ய கோரி மறியல்- பெண்கள் 3 பேர் தீக்குளிக்க முயற்சி

Published On 2023-01-30 07:47 GMT   |   Update On 2023-01-30 07:47 GMT
  • சந்தோஷ் என்பவர் மாணவிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
  • மாணவியின் பெற்றோர் வாலிபர் வேலை செய்யும் இடத்திற்கு சென்று தாக்கியுள்ளனர்.

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் சந்தைமேடு பகுதியை சேர்ந்த ஒருவரின் மகள் அதே பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மாணவி தினமும் பள்ளிக்கு செல்லும் போது அதே பகுதியில் உள்ள தனியார் பேக்கரியில் பணியாற்றும் தீர்த்தம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் மாணவிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை மாணவி தன்னுடைய தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மாணவியின் பெற்றோர் வாலிபர் பேக்கரியில் வேலை செய்யும் இடத்திற்கு சென்று சந்தோஷை தாக்கியுள்ளனர். பின்னர் வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தனர்.

வேலை செய்யும் இடத்திற்கு வந்து தன்னை தாக்கியதாக ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரது சகோதரர் திருநாவுக்கரசு மற்றும் நண்பர்கள் மணி, தரணி ஆகியோருடன் சேர்ந்து மாணவியின் வீட்டிற்குள் புகுந்து கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனால் பலத்த காயமுற்ற மாணவியின் குடும்பத்தினரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து பள்ளி மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். வாலிபரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மாணவியின் தந்தை உட்பட 3 பேரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபரையும் வீடு புகுந்து தாக்கியவர்களையும் கைது செய்ய கோரி மாணவியின் உறவினர்கள் ஒடுகத்தூர் பஸ் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பெண்கள் 3 பேர் திடீரென தீக்குளிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. 

Tags:    

Similar News