தமிழ்நாடு (Tamil Nadu)

பிடிபட்ட ராட்சத திருக்கை மீனை படத்தில் காணலாம்.

ராமேசுவரத்தில் மீனவர்கள் வலையில் சிக்கிய 800 கிலோ குருவி திருக்கை மீன்

Published On 2022-08-13 05:00 GMT   |   Update On 2022-08-13 05:00 GMT
  • காற்று குறைந்து கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதை அடுத்து நேற்று முன்தினம் முதல் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.
  • ஒரு படகில் இறால், நண்டு மற்றும் மீன் வகைகள் 500 கிலோ வரை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராமேசுவரம்:

ராமேசுவரத்தில் கடந்த ஒரு வாரமாக சூறாவளி காற்று வீசியதால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் காற்று குறைந்து கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதை அடுத்து நேற்று முன்தினம் முதல் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.

அதன்படி பாம்பன் தெற்குவாடி பகுதியை சேர்ந்த மீனவர்கள் 200-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு சென்றனர். இவர்கள் மன்னார்வளைகுடா, பாக்ஜலசந்தி ஆகிய பகுதிகளில் மீன்பிடித்து நேற்று கரை திரும்பினர். பெரும்பாலான மீனவர்களுக்கு மீன்பாடு கிடைத்தது.

ஒரு படகில் இறால், நண்டு மற்றும் மீன் வகைகள் 500 கிலோ வரை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பாம்பனை சேர்ந்த மீனவர் ஒருவர் வலையில் 800 கிலோ கொண்ட ஒரு குருவி திருக்கைமீன் சிக்கியது. அதனை 5-க்கும் மேற்பட்டோர் கயிறு கட்டி கரைக்கு இழுத்து வந்தனர். பிரம்மாண்ட திருக்கை மீனை வாங்க மீன் வியாபாரிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதில் ஒருவர் அதிக விலை கொடுத்து அதனை வாங்கி சென்றார்.

பாம்பன் மீனவர்களுக்கு ஒரு வாரத்திற்கு பிறகு அதிக அளவில் மீன்பாடு கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News