வேலூரில் பரபரப்பு - அமித்ஷா பேசிக்கொண்டிருந்த போது ஒரு பேனர் திடீரென சரிந்தது
- வேலூரில் அமித்ஷா பேசியபோது பேனர் ஒன்று திடீரென சரிந்து விழுந்தது.
- இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
வேலூர்:
வேலூர் அருகே உள்ள கந்தனேரியில் மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்காக கந்தனேரியில் பிரம்மாண்ட மேடை அமைத்தனர். இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு பேசினார்.
உள்துறை மந்திரி அமித்ஷா வருகையையொட்டி மாநகர் முழுவதும் மிகப்பெரிய பேனர், கொடி உள்ளிட்டவை வைத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதில் மத்திய போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங், மத்திய தகவல் தொடர்புத்துறை இணை மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், வேலூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசிக்கொண்டிருந்த போது, மேடை அருகே இருந்த பெரிய பேனர் ஒன்று திடீரென சரிந்து விழுந்தது. பேனர் அருகே மக்கள் யாரும் இல்லாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.