தமிழ்நாடு (Tamil Nadu)

மாடு முட்டி அரசு பஸ் ஏறி உயிரிழந்த நபர்.. மாநகராட்சி வெளியிட்ட அதிரடி உத்தரவு

Published On 2024-06-23 12:09 GMT   |   Update On 2024-06-23 12:11 GMT
  • நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது.
  • ஒரே நாளில் நெல்லை மாநகர் பகுதிகளில் சுற்றித்திரிந்த 47 மாடுகள் பிடிக்கப்பட்டு சுமார் 13 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டமான நெல்லையில் உள்ள வண்ணனாரப்பேட்டை பகுதியில் உள்ள பிரதான சாலையில் இரு மாடுகள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அப்போது அந்த வழிகயாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜை இரண்டு மாடுகளும் சேர்ந்து முட்டித் தாக்கியுள்ளன.

இதனால் நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது. இதனால் படுகாயமடைந்த வேலாயுதராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேலாயுதராஜை மாடு முட்டியதும் அவர் மீது பேருந்து கண நேரத்தில் ஏறி இறங்கியதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிருந்த நிலையில் அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Full View

மாடுகளால் மனிதர்கள் தாக்கப்படும் சம்பவம் அதிகரித்து வருவதால் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சாலைகளில் மாடுகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், மாடு வளர்ப்போர் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மாடுகளை கொட்டகையில் வைத்து பராமரித்துக்கொள்ள வேண்டும். சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் மாநகராட்சி ஊழியர்களால் மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று ஒரே நாளில் நெல்லை மாநகர் பகுதிகளில் சுற்றித்திரிந்த 47 மாடுகள் பிடிக்கப்பட்டு சுமார் 13 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News