தமிழ்நாடு

கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா

Published On 2024-07-03 11:28 GMT   |   Update On 2024-07-03 12:15 GMT
  • மேயர் கல்பனா ராஜினாமா செய்தது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • ஒட்டுமொத்தத்தில் கோவை மாவட்ட அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.

கோவை:

தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை மாநகராட்சி. இந்த மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் 97 பேர் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள்.

கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமார் பதவி வகித்து வந்தார். இவர் மாநகராட்சி 19-வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர். இவரது கணவர் ஆனந்தகுமார் தி.மு.க.வில் பொறுப்புக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

மேயர் கல்பனா, பொறுப்பேற்றது முதலே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. இதற்கு அவரது கணவர் ஆனந்தகுமாரின் அரசியல் தலையீடு காரணமாக கூறப்பட்டது. மேலும் தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டத்திலும், நிர்வாகிகள் மத்தியிலும் இவர் பெரிய அளவில் நம்பிக்கையை பெறவில்லை. இதனால் தி.மு.க. கவுன்சிலர்களே அவ்வப்போது தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர்.

இந்தநிலையில் மேயர் கல்பனா, தனது மேயர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், இதுதொடர்பான கடிதத்தை அவர் தி.மு.க. மேலிடத்துக்கு அனுப்பிவிட்டதாகவும் கோவை அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இதற்காக கல்பனா தற்போது சென்னையிலேயே முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக கோவை அரசியல் கட்சியினர் மத்தியிலும், தி.மு.க.வினர் மத்தியிலும் இதுவே பேச்சாக உள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் மாநகராட்சியில் நேற்று நடைபெற இருந்த குறைதீர் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார். மேயர் வழங்கிய ராஜினாமா கடிதத்தை ஆணையர் ஏற்றுக் கொண்டார். மேயர் கல்பனா ராஜினாமா செய்தது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணனும் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை நெல்லை ஆணையருக்கு சரவணன் அனுப்பி வைத்துள்ளார்.

இதையடுத்து மேயர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில் தி.மு.க. மூத்த தலைவர்கள் பலரை இப்போதே தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். இதற்காக பலர் சென்னைக்கு படையெடுத்துச் சென்றுள்ளனர். ஒட்டுமொத்தத்தில் கோவை மாவட்ட அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.

Tags:    

Similar News