தமிழ்நாடு

கொடநாடு வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நெஞ்சுவலி

Published On 2024-08-21 09:15 GMT   |   Update On 2024-08-21 09:16 GMT
  • கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலையும் போலீசார் கைது செய்தனர்.
  • அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்:

சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் கார் டிரைவர் கனகராஜ். இவர் தலைமையிலான கும்பலைச் சேர்ந்தவர்கள் கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் பங்களாவில் கொள்ளை அடிக்க சென்றனர். அப்போது காவலாளியை கொன்று விட்டு கொள்ளையடித்து சென்றனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்த நிலையில் கனகராஜ் ஆத்தூர் அருகே மர்மமான முறையில் இறந்தார். இந்த கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலையும் போலீசார் கைது செய்தனர். இவர் கனகராஜின் சிம்கார்டை எரித்து சாட்சியங்களை அழித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தாரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் அழகு துரையின் சட்டையை பிடித்து தள்ளியதாக போலீசார் தனபாலை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் நேற்று தனபாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது . அவரை உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சிறையில் இருந்த போதும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News