அமைச்சரிடம் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார்
- தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர்கள் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர்.
- உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மதிவேந்தன் பெற்றோர்களிடம் தெரிவித்தார்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஒரு அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். இப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டட திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று மாலை அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் உமா, ஈரோடு திமு.க. எம்.பி. பிரகாஷ் ஆகியோர் வந்தனர்.
இதனிடையே அமைச்சரின் வருகையை அறிந்த பள்ளி மாணவிகள் சிலர் பெற்றோர்களுடன் முன்னதாக பள்ளியின் முன்பு காத்திருந்தனர். அமைச்சர் காரில் வந்தபோது மாணவிகள், பெற்றோர்கள் அமைச்சரின் காரை முற்றுகையிட்டு அமைச்சரிடம் இப்பள்ளியில் உள்ள ஆசிரியர் மாணவிகளை சில்மிஷம் செய்கிறார். இதனால் எங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. பள்ளிக்கு அனுப்புவதே தயக்கமாக உள்ளது. எனவே தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர்கள் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர். உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மதிவேந்தன் பெற்றோர்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.