தமிழ்நாடு (Tamil Nadu)

கண்ணன்கோட்டை ஏரியில் இருந்து முதன்முதலாக பூண்டிக்கு தண்ணீர் திறப்பு

Published On 2024-10-10 07:30 GMT   |   Update On 2024-10-10 07:30 GMT
  • ஏரியின் கொள்ளளவு 500 மில்லியன் கன அடி ஆகும்.
  • ஏரியில் தண்ணீரை சேமித்து வைப்பதில் சிரமம் ஏற்படும்.

ஊத்துக்கோட்டை:

பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கும் தண்ணீரைக் கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. சென்னையில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு ஊத்துக்கோட்டை அருகே உள்ள கண்ணன்கோட்டை, தேர்வாய்கண்டிகை கிராமங்களில் உள்ள 2 ஏரிகளை ஒன்றிணைத்து சுமார் 1600 ஏக்கர் நிலப்பரப்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ரூ.350 கோடி செலவில் புதிய ஏரிஅமைக்க உத்தரவிட்டார். இதைத்தொடரந்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5-வது ஏரியாக கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி கடந்த 2020-ம் ஆண்டுஉருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த ஏரியின் கொள்ளளவு 500 மில்லியன் கன அடி ஆகும். இதில் சேமிக்கப்படும் தண்ணீரை தேவைப்படும் போது பூண்டி ஏரிக்கு அனுப்பி வைக்கும் விதத்தில் திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி தேர்வாய்கண்டிகை ஏரியில்ருந்து சுமார் 9 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஊத்துக்கோட்டை அம்பேத்கார் நகர் பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாய் வரை ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டது. கண்ணன்கோட்டை ஏரியில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் இந்த ராட்சத குழாய் வழியாக அம்பேத்கர் நகரில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் வந்து சேர்ந்து அதன் பிறகு பூண்டி ஏரிக்கு சென்றடையும் வகையில் உள்ளது.

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி உருவான பின்னர் கடந்த ஆண்டு ஏரியில் இருந்து சோதனையை முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீர் தங்கு தடையின்றி ஊத்துக்கோட்டை அருகில் அம்பேத்கர் நகரில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் வந்து சேர்ந்தது.

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் தற்போதைய நிலவரப்படி மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியில் 301 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏரியில் தண்ணீரை சேமித்து வைப்பதில் சிரமம் ஏற்படும்.

இதனை கருத்தில் கொண்டு கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் இருந்து பூண்டி ஏரிக்கு முதன் முதலாக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. 50 கன அடி நீர் ராட்சத குழாய்கள் மூலம் பாய்ந்து கிருஷ்ணா கால்வாயில் சேர்ந்து பூண்டி ஏரிக்கு சென்றடைகிறது. வரும் நாட்களில் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்ட இருக்கிறது. பூண்டிஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 19.88 அடியாக பதிவானது. 240 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 250 கனஅடியும், சென்னை குடிநீர் வாரியத்திற்கு பேபி கால்வாயில்17 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Tags:    

Similar News