தமிழ்நாடு (Tamil Nadu)

தீவிரம் அடைந்து வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள்

Published On 2024-05-21 11:58 GMT   |   Update On 2024-05-21 11:58 GMT
  • மார்ச் 14-ம் தேதி கட்டுமான பணிகள் தொடங்கின.
  • இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது.

மதுரை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினர். இதன்பிறகு, நீண்டகாலம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது.

கடந்த 2023-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியானது. இதில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் டெண்டர் எல்&டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மார்ச் 14-ம் தேதி கட்டுமான பணிகள் தொடங்கின.

நீண்டகாலம் கழித்து கட்டுமான பணிகள் தொடங்கிய நிலையில் இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த 2-ம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் எய்ம்ஸ் நிர்வாகம் சமர்ப்பித்தது.

இந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என கடந்த 10-ம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு பரிந்துரை வழங்கியது. அதன்படி, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வழங்கியது.

இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. எல் & டி நிறுவனம் சார்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தினை சமன்செய்யும் வாஸ்து பூஜை போடப்பட்டது.

Tags:    

Similar News