தமிழ்நாடு (Tamil Nadu)

கனமழை- ஈரோடு மாவட்டம், குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Published On 2024-10-22 02:02 GMT   |   Update On 2024-10-22 02:11 GMT
  • புயல் வடக்கு நோக்கி நகர்வதால், தமிழகத்துக்கு பெரிய மழை ஆபத்து இல்லை.
  • தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ந்தேதி தொடங்கியது. தற்போது, உள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தின் அனேக இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து, 23-ந்தேதி, 'டானா' புயலாக உருவெடுக்கும். அதன்பிறகு, இந்த புயல் சின்னம் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 24-ந்தேதி காலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒடிசா-மேற்கு வங்காள கடற்கரை பகுதியை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் வடக்கு நோக்கி நகர்வதால், தமிழகத்துக்கு பெரிய மழை ஆபத்து இல்லை.

இந்த சூழலில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கர்நாடக மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, இன்று திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஈரோட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் ஈரோட்டில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஈரோட்டில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ராஜகோபால் கன்கரா அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் சுற்றுவட்டார பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News