தமிழ்நாடு

மரங்களில் வீடு கட்டி வசிக்கும் பூர்வகுடி விவசாயிகள்

Published On 2024-08-17 04:21 GMT   |   Update On 2024-08-17 04:21 GMT
  • மரங்கள் அனைத்தும் ஒரே அளவில் இருக்கும் வகையில் அமைத்து கொள்கின்றனர்.
  • வீடுகள் கட்டி ஒன்று சமையலுக்காகவும் இன்னொரு அறை படுக்கை அறையாகவும் பயன்படுத்துகின்றனர்.

உடுமலை:

மலைவாழ் மக்கள்தான் மரங்களில் வீடு போல் அமைத்து வசிப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த 22ம் நூற்றாண்டிலும், இயற்கையோடு இயற்கையாக மரங்களில் மரங்களால் விவசாயிகள் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கொழுமத்திற்கு அருகில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

அப்போது இந்த பகுதியில் மரத்தில் அமைக்கப்பட்ட வீடானது கொழுமம் வனப்பகுதிக்கு உட்பட்ட ஆண்டிபட்டிக்கும் கொழுமத்திற்கும் இடையிலும், கொழுமத்திற்கும் இரட்டையம்பாடிக்கும் இடையிலுமாக உள்ள ராயர் குளம் பகுதியில் உள்ளது.

இங்கிருக்கும் விவசாயிகள் பூர்வகுடிகளாக இருந்து வருவதால் காட்டு விலங்குகளைக் கண்டு அச்சம் கொள்வதில்லை. மேலும், எந்தெந்த நேரங்களில் எந்தெந்த விலங்குகள் வரும் என்பதனையும் தெளிவாக அறிந்துணர்ந்து வைத்துள்ளனர்.

மலையில் இருந்து தண்ணீர் குடிக்க வரும் யானைகள் தென்னை மரங்களை மட்டுமே சாய்ப்பதையும் மற்ற மரங்களை எதுவும் செய்யாமல் செல்வதையும் குறிப்பிட்டுச் சொல்கின்றனர். மேலும், இங்கு வேப்பமரத்தில் தாங்கள் கட்டியிருக்கும் மரக்குச்சிகளால் ஆன வீடு மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும், மழைக்காலங்களிலும், வெயில்காலங்களிலும் தாங்கள் வசிப்பதற்கு மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

மரத்தின் மேல் உள்ள கிளைகளை ஒதுக்கி மரக்கிளைகளைக் கொண்டே இடைவெளியை ஏற்படுத்தி, மரக்குச்சிகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து இறுக்கிக் கட்டி விடுகின்றனர். இந்த மரங்கள் அனைத்தும் ஒரே அளவில் இருக்கும் வகையில் அமைத்து கொள்கின்றனர். குச்சிகளின் உயரமும், தடிமனும் ஒரே போன்று இருக்கிறது.

வீடுகளின் மேல் பனை ஓலைகளை மேய்ந்து அதன் மேல் பிளாஸ்டிக் காகிதங்களை போட்டுக்கொள்கின்றனர். எந்த மழை வந்தாலும் இவர்களுக்கு எதுவும் ஆவதில்லை. மரம் ஒடிந்து விழாத வரை அவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்கின்றனர். மேலும் இதனை நிரந்தரமாகப் பயன்படுத்தி வருவதாகவும் கூறுகின்றனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இயல்பாக மேலே ஏறி இறங்கி வருகின்றனர். இவர்கள் நிலத்தில் கல்,மண் கொண்டு கட்டுவதைக் காட்டிலும் இது மிகவும் எளிமையாகவும், சிக்கனமாகவும் இந்த மர வீடுகள் இருப்பதாகக் கூறுகின்றனர்.

ஒரு குடும்பத்தில் உள்ள நபர்கள் குறைந்தது 3 முதல் 6 பேர் வரை இதனுள் ஒரே சமயத்தில் படுத்து தூங்கலாம். அந்த அளவிற்கு உறுதியாகவும், வசதியாகவும் இந்த மரக்குச்சி வீட்டினை அமைத்துள்ளனர்.

மேலும் இரண்டு மரக்குச்சி வீடுகள் கட்டி ஒன்று சமையலுக்காகவும் இன்னொரு அறை படுக்கை அறையாகவும் பயன்படுத்துகின்றனர். இந்த இரண்டு மரக்குச்சி வீடும் ஒரே மரத்தில் இருப்பதுதான் வியப்பு. இந்த மரக்குச்சி வீடுகளை மரக்குச்சிகளின் நீள அகலங்களை பொறுத்து 10-க்கு எட்டடியாகவும், 8-க்கு ஆறடியாகவும் அமைந்திருக்கின்றனர். இந்த வீட்டினை அமைத்த பெருமாள் என்பவரிடம் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் அருட்செல்வன். சிவகுமார் நேரில் ஆய்வு செய்து ஆவணப்படுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News