தமிழ்நாடு (Tamil Nadu)

அதிமுக அதுவே அழிந்துவிடும்- அமைச்சர் ரகுபதி

Published On 2024-10-21 05:59 GMT   |   Update On 2024-10-21 07:39 GMT
  • அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை.
  • திருமாவளவனை பொறுத்தவரை திமுக கூட்டணியில் உறுதியோடு இருக்கிறார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இந்து அறநிலை துறை சார்பாக 3 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை. எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண ஆரம்பித்துவிட்டார். வேறு வேலையில்லாததால். தி.மு.க. கூட்டணியை அவர் உடைக்கவும் முடியாது, கொளுத்தவும் முடியாது, பிரிக்கவும் முடியாது, நசுக்கவும் முடியாது.

இது அனைத்தும் அவர் சார்ந்திருக்கக்கூடிய கட்சிக்கு வேண்டுமென்றால் ஏற்படுமே தவிர, தி.மு.க.வுக்கும் தி.மு.க. கூட்டணிக்கும் எந்த ஒரு சிறு பாதிப்பும் ஏற்படாது. தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என்பது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்தாக இருக்கலாம்.

தமிழ் தாய் வாழ்த்து என்பது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அத்தனை மக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைவராலும் பாடப்பட்டு வருகிறது. சீமான் அதில் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார். தமிழ்நாடு, திராவிடம் இதை இரண்டையும் தமிழ் மண்ணில் இருந்து பிரிக்க முடியாத சொற்கள்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் திராவிடம் என்ற பெயரோடு தான் இருக்கிறது. இங்கு உள்ள கட்சிகள் திராவிடம் சார்ந்த கட்சிகள் தானே தவிர திராவிடம் சாராத கட்சிகள் இல்லை. யாரும் கட்சி ஆரம்பித்தால் கூட திராவிடம் சார்ந்து தான் கட்சியை ஆரம்பிக்கின்றனர். திராவிடம் என்பது தமிழ் மண்ணிலே ஊறிப்போன ஒன்று. அதை திராவிட கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் முன்னெடுத்துச் செல்லும்.

ஒரு இயக்கத்தை நாங்கள் அழிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அந்த இயக்கத்தின் தலைமை பலவீனமாக இருந்துவிட்டால் அந்த இயக்கம் தானாகவே அழிந்து விடும். இன்று எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை பலவீனமாக உள்ளது. அதனுடைய எடுத்துக்காட்டு தான் இந்த குழப்பம்.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை. நம்பிக்கைக்குரிய இணையாக அ.தி.மு.க.வை ஏற்றுக்கொள்ள எந்த கட்சியும் தயாராக இல்லை. அவரும் என்னென்னமோ எண்ணி வலைவீசி பார்க்கிறார். யாரும் அவர் பக்கம் செல்வதற்கு தயாராக இல்லை. அவரை திரும்பி கூட பார்க்கவில்லை. அதுதான் உண்மை.

சீமான் கற்பனையில் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போகலாம். ஏதாவது குட்டி கலாட்டா செய்ய வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். திருமாவளவனை பொறுத்தவரை திமுக கூட்டணியில் உறுதியோடு இருக்கிறார். தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் அரசு அமைவதில் அவர் உறுதியோடு இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், முத்துராஜா எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் தவ. பாஞ்சாலன், மாமன்ற உறுப்பினர் கனக அம்மன் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News