தமிழ்நாடு (Tamil Nadu)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2024-10-21 07:24 GMT   |   Update On 2024-10-21 07:24 GMT
  • டெல்டா மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் அங்கு தண்ணீர் தேவை குறைந்து உள்ளது.
  • மேட்டூர் அணையில் தற்போது 62.14 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

சேலம்:

தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

மேலும் டெல்டா மாவட்டத்திலும் மழை பெய்து வருவதால் அங்கு தண்ணீர் தேவை குறைந்து உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வந்த தண்ணீரும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு விடிய விடிய தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

நேற்று வினாடிக்கு 15 ஆயிரத்து 929 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை 18 ஆயிரத்து 94 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. இதே போல் காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.89 அடியாக உயர்ந்தது. அணையில் தற்போது 62.14 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News