தமிழ்நாடு

தாய் பரமேஸ்வரியுடன், மகன் லோகேஷ்.

மகன் தற்கொலை செய்த அதிர்ச்சியில் உயிரை மாய்த்து கொண்ட தாய்

Published On 2023-11-16 03:35 GMT   |   Update On 2023-11-16 03:35 GMT
  • மகன் லோகேஷ்வரனுக்கு திருமணமாகாத நிலையில், தாயுடன் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.
  • லோகேஸ்வரன் ஆங்கிலத்தில் 4 பக்கங்களில் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

சென்னை:

சென்னை அருகே உள்ள ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சாந்திபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 47). இவருக்கு ரமேஷ் என்பவருடன் திருமணமான நிலையில், லோகேஷ்வரன் (27) என்ற மகனும், மகளும் இருந்தனர். கணவர் ரமேஷ், பரமேஸ்வரியை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இவரது மகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. மகன் லோகேஷ்வரனுக்கு திருமணமாகாத நிலையில், தாயுடன் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.

பரமேஸ்வரி அம்பத்தூர் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இவரது மகன் லோகேஷ்வரன் ஆவடியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான எச்.வி.எப். தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்ற பரமேஸ்வரி இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது அவரது மகன் லோகேஷ்வரன் வீட்டில் படுக்கையறையில் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனால் மனம் தாங்காத அவர், மகன் தூக்கில் தொங்கிய அதே மின்விசிறி கொக்கியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்து தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்த தாய், மகன் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட வீட்டை சோதனையிட்டபோது, லோகேஸ்வரன் ஆங்கிலத்தில் 4 பக்கங்களில் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

அதில் லோகேஸ்வரன் என்னுடைய சாவுக்கு யாரும் காரணமல்ல, எனது தாய் உள்பட யாரையும் விசாரிக்க கூடாது என்றும், என்னுடைய அம்மாவுக்கு வரவேண்டிய நிலத்தின் பாகத்தை எனது தாய் மாமாவுக்கு தந்து விடுங்கள், அவர்கள் நன்றாக இருக்கட்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். தாய், மகன் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News