தமிழ்நாடு (Tamil Nadu)

இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் தள்ளிவைப்பு

Published On 2024-05-12 06:06 GMT   |   Update On 2024-05-12 06:06 GMT
  • நாகைக்கு வரவேண்டிய பயணியர் கப்பல் தாமதமானதால் வரும் 17-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
  • யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம்:

நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டது. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 'செரியாபாணி' என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதியுடன் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஏற்கனவே இயக்கப்பட்ட 'செரியாபாணி' கப்பலுக்கு மாற்றாக 'சிவகங்கை' என்ற பெயர் கொண்ட மற்றொரு பயணிகள் கப்பல் நாகை-இலங்கை இடையே பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது.

திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சுபம் குரூப் ஆப் கம்பெனி மற்றும் இன்ட் ஸ்ரீ ப்ரே சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகியவை இணைந்து 'சிவகங்கை' என்ற பெயரில் நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் சேவையை நாளை முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் நாகையில் இருந்து இலங்கைக்கு நாளை தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்து மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாகைக்கு வரவேண்டிய பயணியர் கப்பல் தாமதமானதால், வரும் 17-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

முன்பதிவு செய்த பயணிகள் பயண தேதியை மாற்றிக்கொள்ளலாம் அல்லது கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News