தமிழ்நாடு (Tamil Nadu)

காவிரி ஆற்றில் கூட்டம் கூட்டமாக நீந்திச்செல்லும் நீர்நாய்கள்

Published On 2024-08-03 02:15 GMT   |   Update On 2024-08-03 02:15 GMT
  • நீர்நாய்களில் மொத்தம் 13 சிற்றினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  • அழிந்து வரும் விலங்கினமான நீர்நாய்களை பாதுகாக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

நீர்நாய்... இது நீரில் வாழ்வதற்கேற்ற தகவமைப்பு கொண்ட ஒரு வகையான பாலூட்டி இனமாகும். இவை பாதிநேரம் கரையிலும், பாதி நேரம் நீரிலும் வாழ்வதால், பாதி நீர்வாழ் பாலூட்டிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

விலங்குகள் வரிசையில் பட்டியலிடப்பட்டாலும் இவை மீன்கள், இறால், நண்டு, நத்தை போன்றவற்றையே இரையாக கொள்கின்றன. இரைகளை பிடித்த பிறகு நீர் அல்லது நிலத்துக்கு எடுத்துச்சென்று உண்கின்றன. இவை நீர்நிலைகளில் ஆழம் குறைவாக உள்ள பகுதிகளில் சுலபமாக இரை தேடுகின்றன.

நீர்நாய்களில் மொத்தம் 13 சிற்றினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மெலிந்தோ அல்லது சற்றே பருமனுடனோ, நீண்ட உடல்வாகினை பெற்றுள்ள நீர்நாய்கள் தண்ணீரில் செல்வதற்கு ஏதுவாக பாதங்களில் சவ்வுகளையும், வேட்டையாடுவதற்கு ஏற்ப கூர்மையான பற்களையும் கொண்டுள்ளது. 2 முதல் 6 அடி உயரம் வரையிலான நீர்நாய்கள் 45 கிலோ எடை வரை வளரக்கூடியதாகும். சுமார் 16 ஆண்டுகள் வரை வாழும்.

நல்ல தண்ணீரை மட்டுமே தனது வாழ்விடமாக கொண்ட நீர்நாய்கள், சதுப்புநிலம், ஈர நிலம், ஆறு, குளம் மற்றும் நெல்வயல்களில் அதிகளவில் காணப்படுகின்றன. நீர்நிலைகளின் மாசுபாடு காரணமாக சிங்கப்பூர், கம்போடியா, பூட்டான் உள்ளிட்ட நாடுகளில் முற்றிலும் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சிமலையையொட்டிய ஆற்றுப்படுகைகள் மற்றும் கரூரில் இருந்து திருச்சி வழியாக டெல்டாவிற்கு பாயும் காவிரி ஆற்றுப்படுகைகளிலும் தற்போது அதிகளவில் நீர்நாய்கள் வசித்து வருகின்றன.

அழிந்து வரும் விலங்கினமான நீர்நாய்களை பாதுகாக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் சுற்றுலாத்தலமான முக்கொம்பு மற்றும் அதனை சுற்றியுள்ள காவிரி ஆற்றுப்பகுதிகளில் தற்போது அதிகளவில் நீர்நாய்கள் வசிக்கின்றன. முக்கொம்புக்கு சுற்றுலா செல்பவர்களும், காவிரி ஆற்றுப்படுகைகளுக்கு செல்பவர்களும் நீர்நாய்கள் கூட்டம், கூட்டமாக தண்ணீரில் நீந்தி செல்வதை காணலாம்.

ஆற்றில் வளர்ந்து நிற்கும் கோரைப்புற்களுக்கு நடுவில் மறைவிடமான பகுதியில் நீர்நாய்கள் பதுங்கி கொண்டு தன்னையும், தன் குட்டிகளையும் பாதுகாக்கிறது. மேலும் அதனை பாதுகாப்பு அரணாக கொண்டு, அங்கிருந்தவாறே மீன்களை பிடித்து உணவாக்கி கொள்கிறது. குறிப்பாக மாலை பொழுதுகளில் காவிரி ஆற்றின் மணற்பாங்கான இடங்களில் நீர்நாய்கள் உருண்டு, புரண்டு விளையாடும் காட்சி பொதுமக்களை கவர்ந்து இழுக்கிறது. நீர்நாய்கள் துள்ளி குதித்து விளையாடுவதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News