தமிழ்நாடு (Tamil Nadu)

கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

Published On 2024-08-18 12:57 GMT   |   Update On 2024-08-18 12:57 GMT
  • மெரினாவில் கருணாநிதியின் நினைவிடம் சென்ற அமைச்சர் ராஜ்நாத் சிங்கை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.
  • மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞர் 100 நாணயத்தை வெளியிட உள்ளார்.

சென்னை:

தமிழின தலைவர், கலைஞர் என அழைக்கப்படும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 5 முறை முதல்-அமைச்சராக இருந்தவர் ஆவார். 13 முறை எம்.எல்.ஏ.வாகவும், மேலவை உறுப்பினராகவும் இருந்து உள்ளார்.

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கடந்த ஆண்டு ஜூன் 3-ம் தேதி முதல் ஓராண்டு சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஓராண்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதம் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளில் அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்தது.

பல்வேறு காரணங்களால் நாணய வெளியீட்டு விழா தள்ளிப்போன நிலையில், இன்று மாலை அதற்கான விழா கோலாகலமாக நடைபெறுகிறது.

இதற்கிடையே, இந்த விழாவில் பங்கேற்க மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று மதியம் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக ஐஎன்எஸ் அடையாறு சென்றார். அங்கு கடலோர காவல்படைக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பான நவீன கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இந்நிலையில், மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்ற அமைச்சர் ராஜ்நாத் சிங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

அதன்பின், கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய ராஜ்நாத் சிங், கருணாநிதியின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியையும் பார்வையிட்டார்.

Tags:    

Similar News