தமிழ்நாடு (Tamil Nadu)

சாலை வசதி வேண்டி பொதுமக்கள் திடீர் மறியல்

Published On 2024-10-04 04:31 GMT   |   Update On 2024-10-04 04:31 GMT
  • மறியலால் வேட்டனூர் பகுதியில் சென்ற வாகனங்கள் அரை மணி நேரம் தாமதமாக சென்றது.
  • மக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் வேட்டுனூர் சாலையானது நாகுடியிலிருந்து மாணவநல்லூர், வேட்டனூர் வழியாக நிலையூர், செல்லப்பன் கோட்டை, பானாவயல், தண்டலை உள்ளிட்ட கிராமங்களை கடந்து மணமேல்குடி கிழக்கு கடற்கரைச் சாலையை சென்றடைகிறது.

சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் இணைப்புச்சாலையில் தினம்தோறும் அறந்தாங்கி, நாகுடி மற்றும் மணமேல்குடி வரை 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பள்ளி கல்லூரிக்கும், பொதுமக்கள் வேலைக்கும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் வேட்டனூர் கிராமத்தில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனை சரி செய்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சிறிது நேரம் மறியலில் ஈடுபட்ட அவர்கள் பேருந்தில் குழந்தைகள், பெண்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் இருந்ததால் அவர்களின் பணிகள் மற்றும் நலன் கருதி பொதுமக்கள் தாங்களாகவே சாலை மறியலை கைவிட்டனர்.

மறியலால் வேட்டனூர் பகுதியில் சென்ற வாகனங்கள் அரை மணி நேரம் தாமதமாக சென்றது.

Tags:    

Similar News