தள்ளுபடி செய்யப்பட்ட கடனுக்கான ரூ.10 ஆயிரம் கோடியை கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும்- ராமதாஸ்
- நகைக்கடன் மற்றும் மகளிர் கடனாக ரூ.7573 கோடி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதில் ரூ.3415 கோடியை மட்டுமே தமிழக அரசு திரும்பக் கொடுத்திருக்கிறது.
- கூட்டுறவு சங்கங்களின் நிதி சுமார் ரூ.10,000 கோடி திரும்ப வராததால் அவற்றின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாதவை கூட்டுறவு அமைப்புகள் ஆகும். ஆனால், தமிழ்நாட்டில் கூட்டுறவு அமைப்புகள் மூடுவிழாவை நோக்கி பயணிக்கின்றன. அதற்குக் காரணம் தமிழக அரசின் தவறான அணுகு முறை தான். தமிழ்நாட்டில் கடந்த 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் பயிர்க்கடன் தள்ளுபடி நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. நகைக்கடன் மற்றும் மகளிர் கடனாக ரூ.7573 கோடி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதில் ரூ.3415 கோடியை மட்டுமே தமிழக அரசு திரும்பக் கொடுத்திருக்கிறது. இன்னும் ரூ.4158 கோடி கடன் தொகையை திரும்பத் தர வேண்டியுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப் பட்டதில் இன்னும் ரூ.5000 கோடிக்கும் மேல் அரசிடமிருந்து திரும்பப் பெற வேண்டியுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் நிதி சுமார் ரூ.10,000 கோடி திரும்ப வராததால் அவற்றின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.
தள்ளுபடி செய்யப்பட்ட கடனுக்காக வழங்க வேண்டிய ரூ.10,000 கோடியை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி அவை முழு அளவில் செயல்படவும், அனைத்து சங்கங்களும் லாபம் ஈட்டும் நிலையை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.