தமிழ்நாடு
விருத்தாசலம் அருகே சாலையின் தடுப்பு கட்டையில் அரசு பஸ் மோதி கவிழ்ந்தது- 25 பேர் படுகாயம்
- விபத்தில் பஸ்சின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது.
- விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
சேலத்தில் இருந்து கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப்பிற்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் இன்று அதிகாலை 5.30 மணியளவில் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் அருகே வந்த போது திடீரென நிலைதடுமாறி சாலையின் குறுக்கே போடப்பட்டுள்ள தடுப்பு கட்டை மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.
அதிகாலை நேரம் என்பதால் தூக்க கலக்கம் தெளிந்த பயணிகள் பஸ் மோதிய வேகத்தில் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
இந்த விபத்தில் பஸ்சின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் டிரைவர், கண்டக்டர் உள்பட பஸ்சில் இருந்த 25 பயணிகள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.