பா.ஜனதா கூட்டணி உரசல்- கவர்னர் தமிழிசையுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு
- இரு கட்சிகளுக்குள்ளும் ஏற்பட்டுள்ள உரசல் போக்கு மேல்மட்டத்தலைவர்களிடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
- கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளை டெல்லி மேலிடத்தின் காதுகளில் போடுவதற்காகவே சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் பா.ஜனதாவில் இருந்து வெளியேறி வரும் நிர்வாகிகள் சிலர் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்து வருகிறார்கள்.
இது பா.ஜனதா தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜனதாவில் இருந்து நிர்வாகிகளை இழுத்து கட்சி நடத்த வேண்டிய நிலைக்கு திராவிட கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன என்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை விமர்சித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து அ.தி.மு.க. தரப்பில் இருந்து செல்லூர் ராஜூ கூறியதாவது:-
பா.ஜனதாவினருக்கு சகிப்புத் தன்மை இல்லை. அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை என்று கூறினார். அதேநேரம் அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணி தொடருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இருப்பினும் இரு கட்சிகளுக்குள்ளும் ஏற்பட்டுள்ள இந்த உரசல் போக்கு மேல்மட்டத்தலைவர்களிடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திலும் இது பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு மாலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், காமராஜ், டாக்டர் விஜய பாஸ்கர் ஆகிய 3 பேரும் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் கவர்னர் டாக்டர் தமிழிசையை சந்தித்து பேசி இருக்கிறார்கள். சுமார் 30 நிமிடத்துக்கும் மேலாக இந்த சந்திப்பு நடந்திருக்கிறது.
கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளை டெல்லி மேலிடத்தின் காதுகளில் போடுவதற்காகவே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.