தமிழ்நாடு

மகா விஷ்ணு கைது நடவடிக்கை பின்னணியில் சதி உள்ளது- அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு

Published On 2024-09-13 06:23 GMT   |   Update On 2024-09-13 06:23 GMT
  • திருவள்ளூர் பற்றி பேசிய மகா விஷ்ணுவை 250 போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
  • மாற்றுத்திறனாளி ஆசிரியரை மகா விஷ்ணு அவமதித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை:

சென்னை அசோக்நகர் பெண்கள் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் மகா விஷ்ணு கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் அசோக் நகர் பள்ளிக்கு இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் நேரில் செல்ல இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டனர். காலை 10.30 மணியளவில் அர்ஜூன் சம்பத் அசோக் நகர் பள்ளிக்கு நேரில் சென்றார்.

ஆனால் அவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து பள்ளிக்கூட வாசலில் வைத்து அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளி மாணவ-மாணவிகள் மத்தியில் பேசிய மகா விஷ்ணுவை பயங்கரவாதியை போல கைது செய்துள்ளனர். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் நடைபெறும் உபதேசங்களை யாரும் கண்டு கொள்வது இல்லை.

ஆனால் திருவள்ளூர் பற்றி பேசிய மகா விஷ்ணுவை 250 போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். மாற்றுத்திறனாளி ஆசிரியரை மகா விஷ்ணு அவமதித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

அசோக்நகர் பள்ளி கல்வியில் சிறந்த பள்ளியாகும். அந்த பள்ளியின் புகழை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அருகில் உள்ள சில தனியார் பள்ளிகள் திட்டம் தீட்டியுள்ளன. மகா விஷ்ணு கைது நடவடிக்கையில் சதி நடந்து உள்ளது. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளோம்.

அசோக் நகர் பள்ளிக்கு சென்று நடந்தது என்ன? என்பது பற்றி கேட்டறியலாம் என்பதற்காகவே சென்றேன். ஆனால் உள்ளே செல்வதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்ததால் திரும்பி வந்துவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News