தமிழ்நாடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2024-07-17 05:04 GMT   |   Update On 2024-07-17 05:04 GMT
  • கடந்த 2 நாட்களில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது.
  • 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.83 அடியாக உள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

நேற்று பவானிசாகர் அணைக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வந்த நிலையில் மேலும் நீர்வரத்து அதிகரித்து இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 661 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 74.73 அதிகரித்து உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி என மொத்தம் 1,105 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.83 அடியாக உள்ளது. இதே போல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.80 அடியாக உயர்ந்து உள்ளது.

Tags:    

Similar News