தமிழ்நாடு (Tamil Nadu)

சென்னையில் பழமையான எழும்பூர் மியூசியத்தில் சீரமைப்பு பணிகள் மும்முரம்

Published On 2022-07-29 09:29 GMT   |   Update On 2022-07-29 09:59 GMT
  • நாட்டுப்புற கலை மற்றும் இசை பாதுகாக்கும் காட்சியகங்கள் உள்ளது.
  • பழங்கால உலோகவியல், நாணயவியல் மற்றும் ரசாயன பாதுகாப்பு காட்சியகங்கள் பொதுமக்களை கவருகின்றன.

சென்னை:

சென்னையில் பழமை வாய்ந்த எழும்பூர் அருங்காட்சியக பழங்கால கட்டிடங்கள் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னை எழும்பூரில் பாந்தியன் சாலையில் பழமை வாய்ந்த அருங்காட்சியகம் (மியூசியம்) அமைந்து உள்ளது. இந்தியாவின் 2-வது பழமையான அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் திகழ்கிறது. 1851- ம் ஆண்டில் எழும்பூர் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது ஆகும்.

இந்த அருங்காட்சியகத்தில் தொல்லியல், மானுடவியல், நுண்ணுயிரியல் சிற்பவியல் அனைவரையும் கவரும் விதமாக உள்ளது. 16 ஏக்கர் நிலப்பரப்பில் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

இதன் வளாகத்தில் 46 காட்சியகங்கள் கொண்ட 6 கட்டிடங்கள் உள்ளன. தலைமைக் கட்டடத்தின் கீழ்தளத்தில் சிற்பங்கள், இந்து சிற்பங்கள், அமராவதி, சமணம், பொது விலங்கியல், பறக்கும் விலங்குகள், வெளிநாட்டு விலங்குகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள், பொது நிலவியல் போன்ற 13 காட்சிக்கூடங்கள் உள்ளன.

பழங்கால கலைப்பொருட்கள், கல் சிற்பங்கள், தாவரவியல் காட்சியகங்கள், பட தொகுப்புகள் ஆகியவைகள் பிரமிக்க வைக்கின்றன. மேலும் நாட்டுப்புற கலை மற்றும் இசை பாதுகாக்கும் காட்சியகங்கள் உள்ளது. பழங்கால உலோகவியல், நாணயவியல் மற்றும் ரசாயன பாதுகாப்பு காட்சியகங்கள் பொதுமக்களை கவருகின்றன.

குழந்தைகளின் காட்சி கூடத்தில், குழந்தைகள் பிரிவு, தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானக் கலைகள் ஆகியவை உள்ளன. தேசிய கலைக்கூடத்தில் சிறப்பான ஓவியங்கள், கலை சிறப்பம்சங்கள் உள்ளன.சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும்.

மின்னணு தொழில் நுட்பத்தில் மின்னணு தொடுதிரை, முப்பரிமாண தோற்ற அமைப்பு, செயலி உள்ளிட்டவை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அருங்காட்சியகம் தினமும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஆதிகாலம் முதல் தற்போது வரை அனைத்தும் பார்வையாளர்கள் எளிதில் கற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

பெண் யானையின் எலும்புகூடு, நீல திமிங்கலத்தின் எலும்புக்கூடு உள்ளிட்டவை பார்வையாளர்களை மிகவும் வியக்க செய்கிறது. டைனோசர் போன்ற எலும்புக்கூடு பார்வையாளர்களை கவரும் வண்ணம் உள்ளது.

பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் அருங்காட்சியகத்தை பார்க்க வசதி உள்ளது. மேலும் இங்கு பதிவு கட்டணமாக பெரியவர்களுக்கு 15 ரூபாயும், குழந்தைகளுக்கு 10 ரூபாயும், பள்ளி குழந்தைகளுக்கு 5 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வெளிநாட்டவருக்கு 250 ரூபாயும், வெளிநாட்டு குழந்தைகளுக்கு 150 ரூபாயும், வெளிநாட்டு பள்ளி குழந்தைகளுக்கு 75 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தின் வளாகத்தில் கண்காட்சி கூடத்தின் பழமையான கட்டிடங்கள் பழமை மாறாமல் சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. வெயில் மழையால் பாதிக்கப்பட்ட பழமையான மேற்கூரை ஓடுகள் மாற்றி அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.

மேலும் பழமையான அருங்காட்சியக ஆடிட்டோரியம் (மியூசியம் தியேட்டர்) சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு சேதமடைந்த தரைகள், மற்றும் இருக்கைகள் புதுப்பிக்கப்படுகின்றன. புதியதாக வர்ணம் பூசும் பணிகளும் நடந்து வருகின்றன .இன்னும் ஒரு சில மாதங்கள் வரை இப்பணிகள் நடைபெற உள்ளன.

Tags:    

Similar News