கனமழை எதிரொலி- இன்று ரத்தான ரெயில்களின் விவரம்...
- தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் முற்றிலுமாக விலகி, வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை:
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மற்றும் வட மாவட்டங்களையொட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இது தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுமட்டுமல்லாமல், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த காரணங்களால் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) மழைக்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் முற்றிலுமாக விலகி, வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று சில ரெயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனூர் இடையேயான எக்ஸ்பிரஸ் (20601), சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை இடையேயான ஏலகிரி எக்ஸ்பிரஸ் இருமார்க்கங்களிலும் ரத்து.
சென்னை - திருப்பதி இடையேயான சப்தகிரி எக்ஸ்பிரஸ் (16057), சென்னை - திருப்பதி இடையேயான எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கங்களிலும் ரத்து.
ஈரோடு - சென்னை சென்ட்ரல் இடையேயான ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22650) ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.