அண்ணாமலைக்கு தகவல்கள் தெரிவிக்கும் உயர் அதிகாரிகள்....?
- கடந்த சில தினங்களுக்கு முன்பு கோட்டையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
- கோட்டை குமுறல் இப்போது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஆளும் தி.மு.க. அரசில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கவனத்திற்கு உடனுக்குடன் சென்று விடுவதாக கூறப்படுகிறது. அதனால் தான் அவர் அவ்வப்போது தி.மு.க.வுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் செயல்படுகிறார் என்ற புகார் ஏற்கனவே தி.மு.க.வுக்குள் புகைந்து கொண்டே இருப்பது தான். இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோட்டையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் அமைச்சர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நான் பலமுறை நேரில் சந்திக்கும் போதெல்லாம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறி இருக்கிறேன்.
மோடி அரசின் விசாரணை அமைப்புகள் நம்மை வேவு பார்ப்பதிலும், வேட்டையாடுவதிலும் தீவிரமாக உள்ளன. அவ்வப்போது இரவு நேரங்களில் நாளை ரெய்டு வரலாம். இன்று ரெய்டு வரலாம் என்ற தகவல்கள் எனக்கு வந்த வண்ணம் உள்ளன. நம்மிடையே பேசும் பல தகவல்கள் உடனுக்குடன் பா.ஜனதாவுக்கும், கவர்னருக்கும் செல்கிறது என்று ஆவேசப்பட்டுள்ளார்.
சில உயர் அதிகாரிகளை மத்திய அரசு கையில் எடுத்து விட்டதாகவும் அவர்கள் மூலம்தான் அரசை பற்றிய பல தகவல்கள் வெளியே பரிமாறப்பட்டு வருதாகவும் கடும் கோபத்தில் முதலமைச்சர் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோட்டை குமுறல் இப்போது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.