தமிழ்நாடு

பிளஸ்-1 மாணவியுடன் காதல்: பிளஸ்-2 மாணவரை வெட்டிக்கொன்ற காதலியின் தந்தை

Published On 2023-05-16 05:51 GMT   |   Update On 2023-05-16 05:51 GMT
  • கமலேஸ்வரனுக்கு பழனிசெட்டிபட்டி தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது.
  • கமலேஸ்வரனும், மாணவியும் பல்வேறு இடங்களுக்கு சென்று இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை செல்போனில் பதிவு செய்தனர்.

தேனி:

தேனி அருகே உள்ள சின்னம்மாள்புரம் சன்னாசியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் கமலேஸ்வரன் (வயது 17). இவர் பிளஸ்-2 படித்து வந்தார். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற கமலேஸ்வரன் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து மாணவனின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர்.

நேற்று இரவு வீட்டுக்கு அருகே உள்ள காலி இடத்தில் கமலேஸ்வரன் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார். இதைப் பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து அவரது தாய் ஊஞ்சம்மாள் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவனின் உடலை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காதல் பிரச்சினையில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இது குறித்து மாணவனின் தாய் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

கமலேஸ்வரனும் பழனிசெட்டிபட்டி தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. கமலேஸ்வரனும், அந்த மாணவியும் பல்வேறு இடங்களுக்கு சென்று இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை செல்போனில் பதிவு செய்தனர். இதனிடையே அந்த காதல் விவரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து கமலேஸ்வரனை கண்டித்து இனிமேல் தனது மகளுடன் பழகுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரித்து சென்றனர். அதன் பிறகும் மாணவர் தொடர்ந்து தனது காதலியுடன் பேசி வந்துள்ளார். இதனால் மாணவியின் தந்தையான போடேந்திரபுரம் காளியம்மன் கோவில் அருகில் வசிக்கும் சன்னாசி என்பவர் மாணவனின் செல்போனை பறித்துக் கொண்டு சென்று விட்டார். அதன் பிறகு கமலேஸ்வரனை அழைத்துக் கொண்டு நான் மாணவி வீட்டுக்கு சென்றேன்.

அப்போது சன்னாசி உன் மகனை கண்டித்து வை. படிக்கும் காலத்திலேயே என் மகளுடன் காதல் செய்து வருகிறான். இனியும் தொடர்ந்தால் உன் மகனை கொலை செய்யாமல் விட மாட்டேன் என்று தெரிவித்தார். இதனையடுத்து செல்போனை வாங்கிக் கொண்டு எனது மகனையும் அழைத்துக் கொண்டு நான் வீட்டுக்கு வந்து விட்டேன். இந்நிலையில்தான் எனது மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே எனது மகனை அவர்கள்தான் கொலை செய்திருக்க கூடும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் மாணவியின் பெற்றோரை தேடிச் சென்ற போது அவர்கள் தலைமறைவாகி விட்டனர். இதனைத் தொடர்ந்து சன்னாசி மற்றும் அவரது மனைவி தமிழ்செல்வி ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். காதல் பிரச்சினையில் பிளஸ்-2 மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தேனியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News