தமிழ்நாடு

மிச்சாங் புயல் எதிரொலி- டெல்டா பகுதி மீனவர்கள் 2.10 லட்சம் பேர் தவிப்பு

Published On 2023-12-06 06:51 GMT   |   Update On 2023-12-06 07:04 GMT
  • 5 ஆயிரம் மீனவர்களும் 10 நாளாக கடலுக்குள் செல்லவில்லை.
  • மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக கரையோரங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.

திருச்சி:

புயல் எதிரொலியால் டெல்டாவில் 2.10 லட்சம் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. இதனால் மீன்பிடித் தொழில் முடங்கியுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 2-ம் தேதி நிலைக்கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிச்சாங் புயல் உருவானது. இதனால் தமிழ்நாட்டில் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடல் சீற்றமாக இருக்கும் எனவும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்ததால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. ஆழ்கடல் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்களும், புயல் காரணமாக அவசர, அவசரமாக கரை திரும்பினர்.

நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்களில் நேற்று 3-வது நாளாக 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1500 விசைப்படகு, 5000 பைபர் படகுகளில் மீன் பிடி தொழில் செய்யும் ஒரு லட்சம் மீனவர்களும், காரைக்காலில் 500 விசைப்படகு, 300 பைபர் படங்களில், மீன் பிடி தொழில் செய்யும் 5000 மீனவர்களும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 2500 விசைப்படகு, ஆயிரம் பைபர் படகு, 5000 நாட்டு படகுகளில் மீன் பிடி தொழில் செய்யும், 90 ஆயிரம் மீனவர்களும் நேற்றும் கடலுக்குள் செல்லவில்லை.

இதே போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 500 நாட்டு படகுகள், 146 விசைப்படகுகளில் மீன்பிடி தொழில் செய்யும் 10 ஆயிரம் மீனவர்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 380 விசைப்படகுகள், 300 பைபர் படகுகளில் மீன்பிடி தொழில் செய்யும், 5 ஆயிரம் மீனவர்களும் 10 நாளாக கடலுக்குள் செல்லவில்லை. விசை படகுகளுக்கு வழக்கமாக வழங்க கூடிய அனுமதி டோக்கன்களை, மீன்வளத்துறை வழங்கவில்லை. இதனால் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக கரையோரங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். மிச்சாங் புயல் எதிரொலியால் டெல்டாவில் 2.10 லட்சம் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. இதனால் மீன்பிடி தொழில் முடங்கி உள்ளது

Tags:    

Similar News