அ.தி.மு.க.வில் கோடீஸ்வரர்கள்தான் இனி தலைமை பதவியை பிடிக்க முடியும்- ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
- அ.தி.மு.க. என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி.
- கட்சியை சிலர் கைப்பற்றும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் கோவை மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்துக்கு கோவை செல்வராஜ் தலைமை வகித்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
அ.தி.மு.க.வில் சாமானிய தொண்டனும் கட்சி தலைமை பதவிக்கு வர வேண்டும் என்ற வகையில்தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சட்ட விதிகளை உருவாக்கினர்.
ஆனால் தற்போதுள்ள நிர்வாகிகள் இதனை தங்கள் சுயநலத்துக்காக திருத்தி மாற்றியுள்ளனர். இதனை அ.தி.மு.க. நிர்வாகிகள் நன்கு புரிந்து வருகிறார்கள். புதிய சட்ட விதிகளை உருவாக்கியதால் மிட்டாமிராசுதார்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் மட்டுமே தலைமைப் பதவிக்கு வர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அ.தி.மு.க. என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. இந்த கட்சியை சிலர் கைப்பற்றும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.
உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றுபட்டு இதனை மாற்றுவோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வகுத்த நேர் வழிப்பாதையில் செல்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.