தமிழ்நாடு (Tamil Nadu)

ரவுடிகள் சம்பவ செந்தில் - பாம் சரவணனை பிடிக்க போலீஸ் அதிரடி வேட்டை

Published On 2024-09-25 09:23 GMT   |   Update On 2024-09-25 09:23 GMT
  • சம்பவ செந்தில் தாய்லாந்தில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், பாம் சரவணன் ஆந்திராவுக்கு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
  • சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள ரவுடி ஒழிப்பு பிரிவு போலீசாருடன் மற்ற பிரிவுகளை சேர்ந்த போலீசாரும் கை கோர்த்து செயல்பட்டு வருகிறார்கள்.

சென்னை:

பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்துக்கு பிறகு சென்னையில் ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி திருவேங்கடம் கடந்த ஜூலை மாதம் 15-ந்தேதி போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இதைத் தொடர்ந்து கடந்த 18-ந்தேதி ரவுடி காக்காத்தோப்பு பாலாஜியும், நேற்று முன்தினம் சீசிங் ராஜாவும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களை தவிர 300-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தலைமறைவாக இருந்த முக்கிய ரவுடிகளில் சீசிங் ராஜா, காக்கத்தோப்பு பாலாஜி இருவரும் என்கவுண்டர் செய்யப்பட்டு விட்ட நிலையில் ரவுடி சி.டி.மணிக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடும் போது சி.டி.மணி தவறி விழுந்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் தலைமறைவாக உள்ள ரவுடிகள் சம்பவ செந்தில், பாம் சரவணன் இருவரையும் பிடிப்பதற்கு போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

சம்பவ செந்தில் தாய்லாந்தில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், பாம் சரவணன் ஆந்திராவுக்கு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.

2 ரவுடிகளுக்கும் மிகவும் நெருக்கமான நபர்கள் யார்-யார்? என்பதை அடையாளம் கண்டுள்ள போலீசார் அவர்களின் செல்போன் எண்களை வைத்தும் துப்பு துலக்கி வருகிறார்கள். இதற்காக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள ரவுடி ஒழிப்பு பிரிவு போலீசாருடன் மற்ற பிரிவுகளை சேர்ந்த போலீசாரும் கை கோர்த்து செயல்பட்டு வருகிறார்கள்.

இதனால் சம்பவ செந்தில், பாம் சரவணன் இருவரும் விரைவில் சிக்குவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News