தமிழ்நாடு
சென்னையில் கோவில்களில் பலத்த பாதுகாப்பு- அசம்பாவிதத்தை தடுக்க நடவடிக்கை
- கோவில்கள் அனைத்திலும் போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
- மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை:
கோவையில் கார் வெடித்த சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
கார் வெடிப்பு சம்பவம் கோவில்களை குறி வைத்து நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து சென்னையில் உள்ள முக்கிய கோவில்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், பாரிமுனை காளிகாம்பாள் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்பட முக்கிய கோவில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த கோவில்கள் அனைத்திலும் போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
இதே போன்று கோவில்களின் அருகில் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் நடமாடுகிறார்களா? என்பதையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.