குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்கும் விவரங்களை தெரிவிக்க வேண்டும்- மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
- மத்திய அரசின் தேர்வுக்குழு அலங்கார ஊர்திகளின் பட்டியலை இறுதி செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2022-ம் ஆண்டு குடியரசு தின விழா அலங்கார ஊர்திகளில் தமிழ்நாடு பங்கேற்க மத்திய அரசு அனுமதி மறுத்தது.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந்தேதி குடியரசு தினவிழா நாடு முழுவதும் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படும்.
குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் நடக்கும் அணிவகுப்பும், ராணுவத்தின் இசைக்குழுக்களும் மிகவும் புகழ்பெற்றவை.
முப்படைகளின் அணிவகுப்பும், பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும். மேலும், பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவத்தின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும்.
அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான அலங்கார ஊர்திகளின் மாதிரிகளை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சுதந்திர போராட்டம், 75 ஆண்டு சாதனைகள் மற்றும் தீர்வுகள் என்ற தலைப்பில் அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் இடம்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.
மத்திய அரசின் தேர்வுக்குழு அலங்கார ஊர்திகளின் பட்டியலை இறுதி செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு குடியரசு தின விழா அலங்கார ஊர்திகளில் தமிழ்நாடு பங்கேற்க மத்திய அரசு அனுமதி மறுத்தது.
தமிழக அரசின் சார்பில் அனுப்பப்பட்ட பாரதியார், வேலு நாச்சியார், வ.உ.சிதம்பரனார் போன்றவர்களின் உருவம் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.