தமிழ்நாடு

எல்லை தாண்டி சென்றதாக கைதான தூத்துக்குடி மீனவர்கள் 10 பேருக்கு ரூ.3.5 கோடி அபராதம்- 6 மாதம் சிறை

Published On 2024-09-18 08:00 GMT   |   Update On 2024-09-18 08:00 GMT
  • வழக்கு விசாரணை இலங்கை புத்தளம் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
  • தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 7 மீனவர்களும் சிறைசாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி மகாராஜா. இவர் அந்தோணி தேன் டெனிலா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த மாதம் 20-ம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவர்கள் சர்வதேச எல்லை தாண்டி இலங்கை பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி 22 மீனவர்களை இலங்கையை சேர்ந்த கடற்படையினர் கைது செய்ததுடன், விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மீனவர்கள் அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இலங்கை நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. மேலும் மீதமுள்ள 10 மீனவர்களை, நீதிமன்ற காவலில் வைக்கவும் இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் இன்று வழக்கு விசாரணை இலங்கை புத்தளம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. 10 மீனவர்களில் 3 பேருக்கு உடல்நலக்குறைவு காரணமாக ஆஜராகவில்லை. மீதமுள்ள 7 பேர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி தருவைகுளம் மீனவர்கள் 10 பேருக்கும் ரூ.3.5 கோடி அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தார். இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 7 மீனவர்களும் சிறைசாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News