தமிழ்நாடு (Tamil Nadu)

காய்ச்சல் முகாம்களில் 5,000 மருத்துவப் பணியாளர்கள்- தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடு

Published On 2023-03-07 06:47 GMT   |   Update On 2023-03-07 06:47 GMT
  • காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் நடமாடும் மருத்துவ குழுவினர் நேரில் சென்று பரிசோதனைகளை மேற் கொள்ள உள்ளனர்.
  • இன்ப்ளூயன்சா-ஏ வகை வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்கில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

சென்னை:

தமிழகம் முழுவதும் வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ள காய்ச்சல் முகாம்களில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

அதன்படி ஒவ்வொரு முகாமிலும் மருத்துவர், செவிலியர், ஆய்வக நுட்பனர், உதவியாளர்கள் இடம்பெற உள்ளனர். இதை தவிர காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் நடமாடும் மருத்துவ குழுவினர் நேரில் சென்று பரிசோதனைகளை மேற் கொள்ள உள்ளனர்.

தமிழகத்தில் தற்போது பரவி வரும் இன்ப்ளூயன்சா-ஏ வகை வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்கில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக மாவட்ட துணை சுகாதார இயக்குனர்களுக்கு பொது சுகாதார துறை இயக்குனர் சில முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்திருந்தார்.

அதன்படி சமூகத்தில் பரவி வரும் காய்ச்சல் பாதிப்புகளுக்கு மருத்துவக் கண்காணிப்பை தீவிரப் படுத்துவதுடன் மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்துமாறும், காய்ச்சல் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுக்களை அனுப்பி மருத்துவ முகாம்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

இதை தவிர குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து வினியோகித்தல், உணவு பொருட்கள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்தல், தனிநபர் சுகாதாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே தமிழகத்தின் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம்கள் வரும் 10-ந் தேதி நடை பெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அதற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்பனர்கள், உதவியாளர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News