171 ஆண்டுகள் பழமைவாய்ந்த எழும்பூர் அருங்காட்சியக கலையரங்கம் புதுப்பிக்கப்படுகிறது
- சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம் 1851-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- அருங்காட்சியகத்தில் உள்ள கலையரங்கை மேம்படுத்தி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சென்னை:
சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக கலையரங்க இருக்கைகளை புதுப்பிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம் 1851-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்துக்கு அடுத்த படியாக இந்தியாவின் 2-வது பழமையான அருங்காட்சியமாகும்.
16.25 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில் 6 கலைமிகு கட்டிடங்களுடன் அமைந்துள்ளது. இங்குள்ள 46 காட்சி கூடங்களில் தொல்லியல், நாணயவியல், விலங்கியல், இயற்கை அறிவியல், சிற்பம் ஆகிய துறைகளை சார்ந்த ஏராளமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இயற்கை சார் வரலாறு, பண்பாடு சார் வரலாறு ஆகிய இரு துறைகளை சார்ந்த பல்வேறு அரும்பொருட்களும் அருங்காட்சியகத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் உள்ள கலையரங்கை மேம்படுத்தி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி இங்குள்ள கலையரங்கத்தின் இருக்கைகளை மாற்றி புதிய இருக்கைகள் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தபுள்ளி அறிவிப்பையும் பொதுணப்பணித்துறை வெளியிட்டுள்ளது.