மாமல்லபுரத்தில் வாகனங்கள் நுழைவு கட்டணம் வசூல் நிறுத்தம்
- மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது.
- மாமல்லபுரம் நகருக்குள் வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலை பேரூராட்சி நிர்வாகம் ரத்து செய்தது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள புராதன சின்னங்களை பார்க்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பணிகள் வந்து செல்கிறார்கள்.
மாமல்லபுரம் நகருக்கு உள்ளே நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் பேரூராட்சி நிர்வாகம் நுழைவு கட்டணம் வசூலித்து வந்தது. மோட்டார் சைக்கிளுக்கு ரூ.25. கார்-ரூ.50, பஸ், லாரிகளுக்கு ரூ.100 கட்டணம் வசூல் செய்யப்பட்டது.
வாகன நுைழவு கட்டணம் வசூல் செய்யும் போது ஏற்படும் வாக்குவாதம், மோதல் காரணமாக சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். மாமல்லபுரத்தில் நுழைவு கட்டணம் வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் பொது நல வழக்குகளும் தொடரப்பட்டது.
இந்தநிலையில் நேற்று முதல் மாமல்லபுரம் நகருக்குள் வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலை பேரூராட்சி நிர்வாகம் ரத்து செய்தது. இதனால் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணமோ, புராதன சின்னங்கள் அருகே வாகன நிறுத்துமிட கட்டணமோ செலுத்தாமல் மகிழ்ச்சியுடன் சென்று வருகிறார்கள். இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.