தமிழ்நாடு (Tamil Nadu)

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பரிசல் இயக்க, குளிக்க 6-வது நாளாக தடை

Published On 2024-10-18 05:47 GMT   |   Update On 2024-10-18 05:47 GMT
  • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
  • காவிரி ஆற்றின் கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்காதவாறு ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

ஒகேனக்கல்:

கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

மேலும் கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் நேற்று தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.

இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இன்று 6-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்க முடியாமலும், பரிசலில் பயணம் செல்ல முடியாமலும் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அவர்கள் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை கரையில் இருந்தவாறு நின்று ரசித்து பார்த்தனர்.

மேலும் காவிரி ஆற்றின் கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்காதவாறு ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

Tags:    

Similar News