தமிழ்நாடு (Tamil Nadu)

அடுத்த ஆண்டில் குரூப்-1, 2, 4 தேர்வுகள் எப்போது நடக்கும்? டி.என்.பி.எஸ்.சி. ஆண்டு அட்டவணையில் தகவல்

Published On 2024-10-11 02:17 GMT   |   Update On 2024-10-11 02:17 GMT
  • நடப்பாண்டில் முன்கூட்டியே ஆண்டு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
  • இந்த அட்டவணையில் மேலும் தேர்வு குறித்த அறிவிப்புகள் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.

சென்னை:

தமிழ்நாடு அரசின் கீழ் வரும் துறை சார்ந்த பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் எந்தெந்த பணியிடங்களுக்கு எப்போது அறிவிப்பு வெளியாகும்? அவர்களுக்கான தேர்வு எப்போது நடக்கும்? என்பது உள்ளிட்ட விவரங்களை ஆண்டு அட்டவணையாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிடும். வழக்கமாக இந்த ஆண்டு அட்டவணை, முந்தைய ஆண்டின் இறுதியில் வெளியிடப்படும். ஆனால் நடப்பாண்டில் முன்கூட்டியே ஆண்டு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

அந்த அட்டவணையில், அடுத்த ஆண்டில் (2025) 7 விதமான தேர்வுகளை நடத்துவது தொடர்பான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதாவது, குரூப்-1 பதவிகளுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதம் 15-ந்தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர, ஒவ்வொரு ஆண்டும் அதிகம் பேர் போட்டியிடக் கூடிய குரூப்-4 பதவிகளுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வு ஜூலை மாதம் 13-ந்தேதி நடத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.



அதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான (நேர்முகத்தேர்வுடன் கூடிய) தேர்வு குறித்த அறிவிப்பு மே மாதம் 7-ந்தேதியும், தேர்வு ஜூலை மாதம் 21-ந்தேதியும் நடைபெறும் எனவும், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான (நேர்முகத்தேர்வு அல்லாத) தேர்வு குறித்த அறிவிப்பு மே மாதம் 21-ந்தேதி வெளியிடப்பட்டு, ஆகஸ்டு 4-ந்தேதி தேர்வு நடத்தப்படும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

டிப்ளமோ, ஐ.டி.ஐ. தரத்திலான தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு ஜூன் மாதம் 13-ந்தேதியும், எழுத்துத்தேர்வு ஆகஸ்டு 27-ந்தேதியும் நடைபெற உள்ளது. குரூப்-2, 2 ஏ பதவிகளுக்கான அறிவிப்பு ஜூலை மாதம் 15-ந்தேதியும், முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28-ந்தேதியும், ஒருங்கிணைந்த சிவில் பணிகளுக்கான குரூப்-5ஏ தேர்வுக்கான அறிவிப்பு அக்டோபர் 7-ந்தேதியும், அவர்களுக்கான தேர்வு டிசம்பர் 21-ந்தேதியும் நடத்தப்பட உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. ஆண்டு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அட்டவணையில் மேலும் தேர்வு குறித்த அறிவிப்புகள் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு பதவிக்கும் எவ்வளவு காலி இடங்கள் உள்ளன? என்பது பற்றிய அறிவிப்பு, அதற்கான அறிவிப்பாணை வெளியிடும்போது தெரிவிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருக்கிறது.

Tags:    

Similar News