தமிழ்நாடு

திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்- திமிலை பிடித்து அடக்கிய வீரர்கள்

Published On 2023-01-19 04:27 GMT   |   Update On 2023-01-19 04:27 GMT
  • காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்க காசு, பீரோ, நாற்காலி, பிரிட்ஜ், பீரோ உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுகள் வழங்கப்பட்டன.
  • வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையும் சீறிப் பாய்ந்து வெளியே வரும் போதும், வீரர்கள் காளைகளை அடக்கிய போதும் ஆரவாரத்துடன் கோ‌ஷங்கள் எழுப்பி உற்சாகப்படுத்தினர்

தஞ்சாவூர்:

தஞ்சாவூரை அடுத்த திருக்கானூர்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய விழாவில் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது.

மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. கீழே விழுந்தால் காயம் ஏற்படாமல் இருக்க வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை 1 அடி உயரத்திற்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டிருந்தன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆன்லைன் மூலம் பதிவு செய்த வீரர்களே அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டில் 550 காளைகளும், 401 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். முதலில் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதன் பின்னர் வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. மொத்தம் 12 சுற்றுகளாக போட்டி தொடர்ந்தது.

சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் பாய்ந்து சென்று அடக்க முயன்றனர். ஒரு சில காளைகளின் திமில்கள் வீரர்கள் பிடியில் சிக்கியது. ஆனால் பல காளைகள் திமிறி எழுந்து, யாருடைய கைகளிலும் அகப்படாமல் சீறிப்பாய்ந்து சென்றன. காளைகள் களத்தில் நின்று விளையாடி, வீரர்களை நெருங்கவிடாமல் தூக்கி வீசி பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தன. ஆக்ரோஷமாக ஓடி வந்த காளைகளை வீரர்கள் திமிலை பிடித்து அடக்கிய காட்சிகள் சிலிர்ப்பூட்ட வைத்தது.

காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்க காசு, பீரோ, நாற்காலி, பிரிட்ஜ், பீரோ உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுகள் வழங்கப்பட்டன. இதே போல் அடக்கமுடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. போட்டியை காண தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாது சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் காலையிலேயே திரண்டனர். பலர் போட்டி நடைபெறும் இடத்தின் அருகே இருந்த உயரமான கட்டிடங்கள் மீது ஏறி நின்றும், களத்தில் அமைக்கப்பட்ட இரும்பு தடுப்புகள் வெளிப்புறமாக நின்றபடியும் போட்டியை கண்டு களித்தனர்.

வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையும் சீறிப் பாய்ந்து வெளியே வரும் போதும், வீரர்கள் காளைகளை அடக்கிய போதும் ஆரவாரத்துடன் கோஷங்கள் எழுப்பி உற்சாகப்படுத்தினர். பலர் போட்டியை தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டி வீரர்கள், பார்வையாளர்கள், காளை உரிமையாளர்கள் என 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் லேசான அளவில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் அங்கேயே முதலுதவி சிகிச்சை அளித்தனர். பலத்த காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்தியா முன்னிலையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News