தமிழ்நாடு (Tamil Nadu)

கூல் லிப் பாக்கெட்டில் மண்டை ஓடு அடையாளத்தை ஏன் அச்சிடுவதில்லை?- நீதிபதி கேள்வி

Published On 2024-10-14 11:07 GMT   |   Update On 2024-10-14 11:07 GMT
  • கூல் லிப் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.
  • கூல் லிப் பாக்கெடில் அதன் எச்சரிக்கை வாசகம் "Tobacco users die younger" என உள்ளது.

தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் அருகே கூல் லிப் எனப்படும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவது தொடர்பாக பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் கைதானார் ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் 'கூல் லிப்' எனும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகியுள்ளனர் என கருத்து தெரிவித்த நீதிபதி, தமிழகத்தில் கூல் லிப் போதைப்பொருளுக்கு தடை விதித்திருந்தாலும் பிற மாநிலங்களில் கூல் லிப் விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய போதைப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது என்று வேதனை தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், தற்போது பள்ளி மாணவர்களிடையே பெருகி வரும் வன்முறைக்கு இத்தகைய போதைப்பொருட்கள் பயன்பாடு முக்கிய காரணம். ஆகவே இத்தகைய போதைப் பொருளை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து ஏன் நாடு முழுவதும் தடை செய்யக் கூடாது? என மத்திய , மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குட்கா நிறுவன தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூல் லிப் மட்டுமல்ல, அது போல பலவகையான போதைப் பொருட்கள் உள்ளன. கூல் லிப் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை விடுக்கும் வாசகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று வாதிட்டார்.

இதற்கு கருத்து தெரிவித்த நீதிபதி மற்ற போதைப்பொருட்கள் எல்லாம் பள்ளி, கல்லூரிக்கு வெளியே பயன்பாட்டில் உள்ளன. ஆனால், கூல் லிப் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்தார்.

மேலும், கூல் லிப் பாக்கெடில் அதன் எச்சரிக்கை வாசகம் "Tobacco users die younger" என உள்ளது. இது 'இறக்கும் வரை இளமையாகவே இருக்கலாம்' என புரிந்துகொள்ளும் வகையில் இருக்கிறது. கூல் லிப் பாக்கெட்டில் மண்டை ஓடு அடையாளத்தை ஏன் அச்சிடுவதில்லை? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி பரத சக்ரவர்த்தி, இது குறித்து விளக்கம் அளிக்க குட்கா நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

கூல் லிப் பயன்பாட்டை குறைக்க என்ன மாதிரியான வழிகாட்டுதல் வழங்கலாம் என்பது குறித்து மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 16 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

Tags:    

Similar News