தமிழ்நாடு

சாலையோரம் குட்டியுடன் சுற்றித்திரிந்த காட்டு யானைகள்

Published On 2024-08-14 05:45 GMT   |   Update On 2024-08-14 05:45 GMT
  • காட்டு யானைகள் தனது குட்டிகளுடன் தேசிய நெடுஞ்சாலையோரம் முகாமிட்டிருந்தன.
  • வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவதும், வாகனங்களை வழி மறித்து உணவு இருக்கிறதா? என்று தேடுவதும் தொடர்கதை ஆகிவருகிறது.

இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் தனது குட்டிகளுடன் தேசிய நெடுஞ்சாலையோரம் முகாமிட்டிருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் சிறிது தொலைவிலேயே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டனர். சிலர் தங்களது செல்போன்களில் யானை கூட்டத்தை போட்டோ மற்றும் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

சிறிது நேரம் சாலையோரம் நின்று கொண்டிருந்த காட்டுயானை கூட்டம் சாலையைக் கடந்து பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

எனினும் அதே பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் எனவும், வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News