தமிழ்நாடு (Tamil Nadu)

தகுதி நீக்கத்தால் வினேஷின் சாதனைகளை குறைத்து மதிப்பிட முடியாது- மு.க.ஸ்டாலின்

Published On 2024-08-07 12:14 GMT   |   Update On 2024-08-07 12:14 GMT
  • பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
  • உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்பு.

ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63-வது இடத்தில் உள்ளது.

இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதினர்.

இந்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

இந்த நிலையில் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருக்கிறார்.

அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

வினேஷ், நீங்கள் ஒவ்வொரு வகையிலும் உண்மையான சாம்பியன்.

உங்கள் திறன், வலிமை மற்றும் இறுதிப் போட்டிக்கான குறிப்பிடத்தக்க பயணம் மில்லியன் கணக்கான இந்திய மகள்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.

தகுதி நீக்கத்தால் மனதையும் சாதனைகளையும் குறைத்துவிட முடியாது.

நீங்கள் ஒரு பதக்க வாய்ப்பை இழந்தாலும், உங்கள் அபாரமான உறுதியால் அனைவரின் மனதையும் வென்றுள்ளீர்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News