தனியார் பஸ்களை எடுத்து அரசு இயக்கும் முடிவை கைவிட வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
- தனியார் பேருந்துகளில் வசூலிக்கும் கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
- பேருந்துகளின் எண்ணிக்கை, ஓட்டுநர்களின் எண்ணிக்கை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தீபாவளிப் பண்டிகை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அரசுப் பேருந்துகளை கூடுதல் எண்ணிக்கையில் இயக்கவும், தனியார் பேருந்துகளில் வசூலிக்கும் பேருந்துக் கட்டணத்தினை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது என்பது வழக்கமாக நடைபெறும் ஒன்று.
இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கப் போகிறது என்றும், இதற்காக புதிய பேருந்துகளை வாங்கி, நிறுத்தி வைக்க முடியாது என்றும், கூடுதலாக ஊழியர்களை நியமிக்க முடியாது என்றும் தெரிவித்திருப்பதைப் பார்த்தால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மூடுவிழா எடுக்க தி.மு.க. அரசு முடிவு செய்துவிட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இந்த நடைமுறை முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்.
எனவே, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வசம் உள்ள அனைத்துப் பேருந்துகளையும் முழு வீச்சில் இயக்கி, மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். தனியார் பேருந்துகளில் வசூலிக்கும் கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் போக்கினை கைவிட வேண்டும். பேருந்துகளின் எண்ணிக்கை, ஓட்டுநர்களின் எண்ணிக்கை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.